எனது மாத சேமிப்பு 50-100ல் ஒரு 10 ரூபாயை இழந்த நாள் அது. பாக்டரியில் வேலை நேரம் 8.30 முதல் 5 மணி வரை. ஆனால் 5 மணியில் கிளம்புவது என்பது சிரமமான ஒன்று. கண்காணிப்பாளரின் அனுமதி கிடைத்தால் சாத்தியப்படும். அதிகபட்சம் மாதம் இரு நாட்கள் 5 மணிக்கே பாக்டரியில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கலாம். மற்ற்படி 7 முதல் 8 வரை கூட பணி இருக்க நேரிடும்.
இரண்டு டீ, நான்கு உப்புபெறாத உப்பு பிஸ்கெட் கிடைப்பது மட்டுமே ஓவர்ர் டைம் பரிசு.
அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக 10ஐ நெருங்கிவிட்டது. எனது அலாரம் அடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரமாகிவிட்டிருந்தது. எத்தனை லிட்டர் தண்ணியாலும் அந்த அலாரத்தை நிறுத்த முடியாமல் தோற்று போனது. டெஸ்பேட்ச் நாட்களில் 9 மணி தொடுமென்றாலும், அன்று அதிகபடியான டெஸ்பேட்சின் காரணமாக நேரம் அதிகரித்துவிட்டது. கடைசி பேருந்து 10.30 என்பது அலாரத்தின் அலறல் என் காதில் மேலும் அதிகமாக கேட்க வைத்தது. ஒரு வழியாக பணி மேற்பார்வையாளர் பிச்சை போடும் முகபாவத்தோடு கிளம்ப அனுமதி தந்தார். எல்லாம் முடித்துக்கொண்டு அறை வரும்போதே எஸ் எஸ் ம்யூசிக் சானலின் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் முடிந்து போய் ஒரு மணி நேரம் மேல் ஆனதை அடுத்த அறை 45 வயசு பிரம்மச்சாரி முருகேசனின் குறைட்டையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
பசி, பயணம், வேளை பளு என்று எல்லாம் சேர்ந்து என்னை ஈவு இரக்கமில்லாமல் அடித்து போட்டது. அசதியில் அடுத்த நிமிடமே உறங்கி போனேன். தூக்கம் ஒரு நல்ல பொழுது போக்கு. கண்களை திறந்து கொண்ட கனவுகளையே கண்டிருக்கிறேன், தூக்கத்தில் கனவுகளை கண்டதில்லை அல்லது நியாபகம் வந்ததில்லை. என்றும் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும் பசி அலாரத்தை முந்திக்கொண்டது அதிகாலை கனவு ஒன்று. கீழ் அறை ராஜூக்கு கனவில் அடிக்கடி நடிகைகள்தான் வருவார்களாம். எதோ நிஜமாகவே வந்துவிட்டதை போன்ற குதுகலிப்பான். ஏனோ எனக்கு கனவுகள் வருவதில்லை. வந்த அந்த கனவும் நடிகைகள் வரவில்லை. வந்தது ஒரு நடக்கடலில் ஒரு மரக்கலம் ஒற்றை துடுப்புடன்.
எதோ ஒரு கவிஞருக்கு போக வேண்டிய கனவு வழி தவறி எனக்கு வந்துவிட்டது போலும். அதிகாலை கனவு பலிக்குமாம். ஒரு வேளை கடல் தாண்டி பயணிப்பேனோ வழியில் எதும் கப்பலோ, விமானமோ நொருங்கி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பேனோ என்றெல்லாம் விபரீத கற்பனைகளாளும் காலை அலாரத்தை நிறுத்த முடியவில்லை. வழக்கமான சிற்றுண்டிக்கு பிறகு பேருந்து நிறுத்தம் வந்ததும்தான் நினைவுக்கு வந்தது பஸ் பாஸ் மறந்து போனதை. ம்ம் இன்று ஒரு அநாவசிய நட்டம்.
பாஸ் இருக்கும் நாட்களில் கண்டக்டரை தேடி கூட்டத்தில் நகர அவசியமில்லை, அவர் வந்து சோதிக்கும் போது நீட்டினால் போதும். பேருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. சென்னை எல்லா மாதமும் சித்திரைதான். எப்போது பெண்கள் வரிசையில் ஏறும் வழியிலேயே நடத்துனரின் இருக்கை இருக்கும். அதனால் பெண்கள் பகுதியில் கொடுத்து கண்காணிப்பதே ஷேமம்.
எதோ ஒரு பெண்மணியிடம் காசை தந்து பயணச்சீட்டுக்காக காத்திருக்கையிலே பின்னாளில் இருந்து ஒரு குரல். குரல் திசையை நோக்கி நான். அந்த குரல் என்னை கவரவில்லை. அவளும் என்னை கவரவில்லை. 4.50 ஒன்னு என்றாள். கையில் கைபை. கூட்டத்தில் ஒரு கையில் பாலன்ஸ் செய்து கொண்டு ஒரு கையால் ஒரு 5ரூபாய் நீட்டிக்கொண்டிருந்தாள். வாங்கி கொண்டு ஒரிரு நொடிகள் அவளை நோக்கினேன். சாத்தானின் பார்வை. உடையை சரி செய்து கொண்டால். எதையோ மிதித்தது போல் இருந்தது. அறை எண் 18 தாமு அதைதான் கடவுள் தரிசனம் என்பான். 36 வயது பிரம்மச்சாரி. இரண்டு தங்கைகள். கடைசி தங்கைக்கு சமீபத்தில்தான் திருமணமாகியது.
பேருந்து பயணத்தில் தினமும் காணும் முதியவர்களுக்கு இடம் தராத பெண்கள், கை குழந்தைகாரிகளுக்கு உதவாத இளம்பெண்கள், ஓயாத செல்பேசும் காரிகைகள், கூட்டத்தில் பிதுங்கும் நங்கைகள், மேற்கம்பியை பிடிக்க கையை உயர்த்தும் போது யாராவது கண்களால் கற்பழிக்கிறார்களா என நோட்ட்மிடும் குமரிகள் என பல்வேறு மறந்து போகும் முகங்களில் அவளும் ஒருவளாக இருந்தாள்.
அந்த ஒருவள் ஒரு நாள் எனது அத்தியாயங்களில் ஒன்றிபோகாவிட்டாலும், ஒன்றாகி போனாள். ஒன்று என்பதும் சரியில்லை எதோ சிலவரிகளாகி போனாள்
தொடர்ந்து அவள் இரண்டு வாரங்கள் என் பார்வையில் பட்டுக்கொண்டிருந்தாள். கோபபார்வை மறைந்து போனது. மெல்லிய புன்னகை படந்திருக்கும். அந்த இரண்டு வாரங்களில் எனது அலாரம் கொஞ்சம் பழுதடைந்தது போலும். நேரங்கள் தடம்புரண்டன. நான் இறங்கும் முந்தைய நிறுத்ததில் இறங்கி கொண்டிருந்தாள். மறுபடி குருவைதான் கேட்டேன்.
அநாவசியமா காதல் கீதல்னு இறங்காதே, என்று சுறுக்கமாக நிறுத்திக்கொண்டான். எனக்கு குருவை பிடிக்காமல் போனது. செந்தில் தான் என்னனென்னவோ சொன்னான். அவனை பிடித்துப்போனது. காதலுக்கும் காமத்துக்கு உள்ள வித்தியாசத்தை சொல்லிக்கொண்டிருந்தான்.
மீண்டும் பசி.
(தொடரும்ம்ம்)
No comments:
Post a Comment